ஏழு ஊர் அம்மன் திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
தினமலர் செய்தி
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=120608
டி.கல்லுப்பட்டி: இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடை பெறும் ஏழு ஊர் அம்மன் திருவிழா நேற்று நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். டி.கல்லுப்பட்டி அருகே உள்ள அம்மாபட்டியில் ஏழு ஊர்களுக்குரிய முத்தாலம்மன்கள் அருள் பாலித்தது. இதில் தேவன்குறிச்சியில் ஆதிபராசக்தி, டி.கல்லுப்பட்டி சரஸ்வதி, வன்னிவேலம்பட்டி மகாலட்சுமி, வி.அம்மாபட்டியில் பைரவி, காடனேரியில் திரிபுரசுந்தரி, கிளாங்குளம் சபரி, கி.சத்திரப்பட்டியில் சவுபாக்கியவதியாக காட்சி அளித்தது.
நேற்று அதிகாலையில் தேவன்குறிச்சி,டி.கல்லுப்பட்டி, வன்னிவேலம்பட்டி, காடனேரி, கிளாங்குளம், சத்திரபட்டி கிராமங்களின் சப்பரங்களை பக்தர்கள் வி.அம்மாபட்டி கிராமத்திற்கு சுமந்து வந்து அம்மனை எதிர் சேர்வை செய்து அழைத்துச் சென்றனர். இவர்களுக்கு கிராமத்தின் சார்பில், வெற்றிலை பாக்கு மரியாதை செய்யப்பட்டது. இதில் டி.கல்லுப்பட்டியைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டனர். ஆனால் பேரூராட்சி சார்பில், பஸ் ஸ்டாண்ட் தளம் போடும் பணியை மாதக்கணக்கில் இழுத்தடித்ததால் பஸ்கள் அனைத்தும் பழைய போலீஸ் ஸ்டேசன் அருகே ராஜபாளையம் மெயின் ரோட்டில் நிறுத்தினர். மேலும் ஆட்டோக்கள் கடந்த இரண்டு நாட்களாக அதிக கட்டணம் வசூலித்தன. லட்சணக்கானோர் திரண்ட இந்த திருவிழாவில் போதிய குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்